Saturday, September 25, 2010

ராதிகாவோடு சண்டை போடுவேன்: கன்யா


"செல்லமே' தொடரில் எப்பொழுதும் மது பாட்டிலும் கையுமாகத் திரியும் (மதுமிதா)கன்யாவைப் படப்பிடிப்பில் சந்தித்தோம். அவர் மீது மது வாடை வீசுமே என்கிற தயக்கத்துடனே பக்கத்தில் அமர்ந்து பேசினோம். வாசனைத் திரவியம் மணக்க எவ்வித ஆக்ரோஷமும் இல்லாமல் அமைதியாகப் பேசினார்:
சினிமாத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?


முதன் முதலில் டெலி ஃபிலிம் மூலமாக தான் என் வாழ்கையை ஆரம்பித்தேன். டெலி ஃபிலிம் நடிக்கும்போது, "நங்கூரம்' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு நிறைய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறேன். அப்போது நிம்பஸ் டெலிவிஷன் மூலம் தொடரில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தமிழில் "நீதி' என்ற தொடரில் ஷோபனா மேடம் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு மலையாளத்தில் நான் நடித்தேன். அதன் பிறகு சன் டிவியில் "நீலவானம்' என்ற தமிழ்த் தொடரில் நடிக்கக் கூப்பிட்டார்கள். அது எனக்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிறகு "காவ்யாஞ்சலி' தொடரில் நடித்தேன். ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பொறுமை இருக்குமோ அவ்வளவு அமைதியான பெண்ணாக அஞ்சலி என்ற கேரக்டர் செய்திருந்தேன். பேரும், புகழும் வாங்கி கொடுத்த கேரக்டர் அது. அதன் பிறகு இப்பொழுது "செல்லமே' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.



"செல்லமே' தொடரில் மதுமிதா கேரக்டருக்கு உங்களை எப்படித் தேர்வு செய்தார்கள்?



அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன். என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததினால்தானே என்னைக் கூப்பிட்டிருப்பார்கள்? அந்த நம்பிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். முதலில் கதையைக் கேட்கும் பொழுது தயக்கமாக இருந்தது. ஒரு குடும்பப் பெண் இப்படி இருப்பாளா இந்த மாதிரி நடித்தால் நம்மையும் இப்படி தான் நினைப்பார்களோ என்று நினைத்தேன். என் கணவரிடம் கேட்டேன். அவர் உனக்கு விருப்பமிருந்தால் செய் என்று சொன்னார். அதன் பிறகு தான் ஒத்துக்கொண்டேன்.



உங்களுடைய உடை, அலங்காரம் எல்லாம் ரொம்ப வித்தியாசமாக இருக்கே?எல்லோரையும் டாமினேட் செய்யும் கேரக்டர். சாதாரணமாக இருந்தால் பொருத்தமாக இருக்காது. மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் நானேதான் என் காஸ்ட்யூமை டிசைன் செய்துகொண்டு போய் நின்றேன். ராதிகா மேடம், டைரக்டர் எல்லோருமே பார்த்துவிட்டு இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் இப்படியே செய்திடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதே மாதிரி ஸ்கிரீனில் பார்க்கும்போது ரொம்ப பொருத்தமாக இருந்தது. என்னைப் பார்க்கிற நிறையபேர் என்னிடம் உடைகளைப் பற்றித்தான் முதலில் விசாரிக்கிறார்கள்.



தொடரில் கணவரையும், பிள்ளைகளையும் எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?



எனக்குக் கணவராக அபிஷேக் ஸôர் ரொம்ப பொறுமையான கேரக்டரில் நடிக்கிறார். ரொம்ப நல்ல நடிகர் அவர். அப்படி அவர் திட்டு வாங்குவதனாலதானே அவருடைய கேரக்டரும் என்னுடைய கேரக்டரும் பேசப்படுகிறது. அதேபோல தான் அதில் என் பிள்ளைகளுக்கும் பெயரும் புகழும் கிடைக்கிறது.



உங்கள் நடிப்பைப் பார்த்துவிட்டு வீட்டில் என்ன சொல்கிறார்கள்?



வீட்டில் உள்ள எல்லோருக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். என் கணவர் கவிதாபாரதியும் சரி, என் அம்மாவும் சரி நான் ஏதாவது சரியாகச் செய்யவில்லை என்றால் உடனே சொல்லிவிடுவார்கள். அதுவே நன்றாக நடித்திருந்தால் எதுவுமே சொல்ல மாட்டார்கள். அதைக் கொண்டே நான் என்று நன்றாக நடித்திருக்கிறேன் என்று தெரிந்துகொள்வேன்வேறென்ன தொடரில் நடிக்கிறீங்க?இப்பொழுது விஜய் டிவியில் ஆரம்பமாகி இருக்கிற மீரா தொடரில், என் கணவர் கவிதா பாரதி இயக்கத்தில் நடிக்கிறேன். இதிலும் ஒரு மாதிரி நெகட்டீவ்வான கேரக்டர்தான். அமைதியான குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு உள்ளுக்குள் குத்திவிடுவது போன்ற கேரக்டர். செல்லம்மாவுடன் சண்டை போடும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?



ராதிகா மேடம் ரொம்ப சீனியர் ஆர்ட்டிஸ்ட். இந்தத் தொடரைப் பொருத்தவரை எங்களுக்கு முதலாளியாக இருந்தாலும் நடிப்பு என்று வரும்போது அவுங்க செல்லம்மா என்ற கேரக்டர்... நான் மதுமிதா என்ற கேரக்டர் அவ்வளவுதான். இயக்குநர் சொல்கிறபடி ராதிகாவோடு தொடர்ந்து சண்டை போடுவோம்.

No comments:

Post a Comment