மும்பைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருந்த சுதாசந்திரனை ஏர்போர்ட் வாசலில் சந்தித்தோம். போர்டிங்பாûஸ எல்லாம் செக்கிங் கவுன்டரில் கொடுத்துக் கொண்டே நமது கேள்விகளுக்கு விடையளிக்க ஆரம்பித்தார் "கலச'த்தில் சந்திரவாக கலக்கி, "அரசி'யில் அட்வெகேட்டாக வந்து தற்போது "தாய'த்தில் சோலப்பூவாக மலர்ந்திருக்கும் மயூரி சுதா சந்திரன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகைக்கு அளிக்கும் பேட்டி இது.
தமிழ் தொலைக்காட்சியில் நடிக்க வந்தது எப்படி இருக்கிறது?
பனிரெண்டு வருடத்திற்குப் பிறகு தமிழ்ல நடிக்க வந்தது ரொம்ப சந்தோமா இருக்கு. அப்போ நான் நடிக்கும் போது எனக்கு சரியான ரோல்ஸ் அமையல. படங்கள் சரியா ஓடல. அதுல கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது. இந்த சமயத்துல இந்தியில வாய்ப்புகள் நிறைய வந்தது. அதனால மும்பையில போய் செட்டில் ஆகிட்டேன். அங்கே போய் டி.வி. சீரியல், இந்தி படங்கள் நிறைய நடிச்சேன். அதன் பிறகு அங்கே பாலாஜி டெலி பிலிம்ஸ்ல ரொம்ப பிஸியாக இருந்தேன்.
பாலாஜி டெலி பிலிம்ஸ்ல நடிச்சதை பார்துட்டு குட்டி பத்மினி மேடம் போன் பண்ணி கலசத்துல நடிக்க கூப்பிட்டாங்க. அதே போல பிரபுநேபால் சாரும் ஜெயா டிவியில ஒரு தொடர்ல நடிக்கக் கூப்பிட்டார். அவுங்க இரண்டு பேரும்தான் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு மறுபடி வர காரணம். "கலசம்', "அரசி' இரண்டும் நெகட்டீவ் ரோல். ரொம்பவே மேக்கப் போட்டுக்கிட்டு நடிச்சேன். ராதிகா மேடமோட நடிச்சது ரொம்ப நல்ல அனுபவம். எனக்கு பாரதிராஜா சார் படத்துல நடிக்கனும் ரொம்ப நாளா ஆசையிருந்தது. அப்போ அந்த வாய்ப்பு கிடைக்கல. இப்போ அவரோட உதவியாளர்தான் இந்த தாயம் தொடரை எழுதுறாரு. என்னோட ஆசை நிறைவேறின திருப்தி.
மேக்கப்பே இல்லாம பண்ணியிருக்கீங்களே?
மக்கள் கிட்ட ரீச் கண்டிப்பா இருக்கும். விளம்பரம் பார்த்துட்டே நிறைய பேர் எனக்கு போன் பண்ணி விசாரிக்கறாங்க. "இதுல என்னமாதிரி பண்றீங்க? பார்க்கறதுக்கு ரொம்ப சிம்பிள்ளா இருக்கீங்க, என்ன கதை' அப்படின்னு ரொம்ப ஆர்வமா கேட்கிறாங்க. ஆடியன்ஸ் எவ்வளவு எதிர்பார்ப்போட இருக்காங்கன்னு தெரியுது.
வடிவுக்கரசி மேடம் இதில் பட்டம்மாவா வராங்க. ஒரு சூழ்நிலையில அவுங்க ஜெயிலுக்குப் போக வேண்டியது ஆகிவிடும். அவுங்களுக்கு ஐந்து மகன்கள். அவங்களையும், அவுங்க வீட்டையும் நான் தான் மெயிண்டன் பண்ண வேண்டி இருக்கும். அதில் என் பெயர் சோலப்பூ. சோலப் பூன்னா அது ஆயிரம் வருஷத்துக்கு ஒரு முறை பூக்கும் பூ. அது மாதிரி ஒரு அழகான ரோல். ரொம்ப எமோஷோனல் ஆன ரொம்ப இண்னோசென்ட்டான.. அதே சமயதுல எந்த பிரச்னையா வந்தாலும் உறுதியா எதிர்கொள்கிற மாதிரியான கேரக்டர்.
அப்போது நடித்தற்கும்,இப்போது நடிப்பதற்கும் எப்படி உணர்கிறீர்கள்?
காண்பிடண்ட் வந்திருக்கு. ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்ததுனால தமிழ் அவ்வளவா என்னால பேசமுடியல. இப்போ லாங்வேஜ் நல்லா செட் ஆகிடுச்சு. நல்லா சரளமா தமிழ் பேசுறேன். அதுமட்டுமல்ல மும்பையில் இந்தி தொடர்களில் நிறைய நடித்தில் நல்ல எக்ஸ்பிரியன்ஸ் கிடைச்சருக்கு. அங்கேயும் சரி, இங்கேயும் சரி டைரக்டர்கள் நல்ல சப்போர்ட் பண்ணாங்க. எல்லாரும் நல்ல எக்ஸ்பிரியன்ஸ் டைரக்டர்கள் அதுனால நிறைய அனுபவம் கிடைச்சது.
விபத்தில் உங்கள் காலை இழந்த போது மீண்டும் நடிக்க முடியும்னு நம்பிக்கை இருந்ததா?
அந்த நேரத்துல நடிக்கறது எல்லாம் என் மைண்ட்ல இல்ல. எப்படியாவது எந்து நடக்கனும் மட்டும் தான் ஆசைப்பட்டேன். அதுக்காக நிறைய முயற்சி எடுத்தேன், ரொம்பவும் கஷ்டப்பட்டேன். பிறகுதான் நடிக்கணும்,டான்ஸ் பண்ணணும்ன்ற ஆசை எல்லாம் வந்தது.
மும்பையில் உள்ள ஆடியன்ஸ்க்கும், தமிழ் ஆடியன்ஸ்க்கும் என்ன வேற்றுமை?
ரொம்ப வித்தியாசம் இருக்கு. அங்கே பார்த்தீங்கன்னா கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டு நடிக்கனும். ஆனால் மலையாளம், தமிழ்ல எல்லாம் ஓவர் மேக்கப் எல்லாம் இருக்காது. தமிழ் கதைகள் எல்லாம் ஒவ்வொரு குடும்பத்துலையும் நடக்கிற உண்மையான கதை போல இருக்கும். ரொம்ப ஏதார்த்தமா இருக்கும். இந்தியில அப்படி கிடையாது. இப்போதான் இந்தி டெலிவிஷன் மாறிக்கிட்டு வருது. மெட்ரோவைவிட்டு நகர்ந்து கிராமங்களுக்குப் போக ஆரம்பிதிருக்கிறார்கள். இருந்தாலும் இந்தியில் ஜூவல்லரி, ஆடம்பர சாரின்னு எல்லாமே கொஞ்சம் அதிகமா இருக்கும். ஆனால் தமிழில் அப்படியில்லை. தமிழ் ஆடியன்ûஸ சீட் பண்ண முடியாது.
இதுவரை நீங்கள் நடித்ததில் மறக்க முடியாத கதாபாதிரம் எது ஏன்?
"மயூரி' படம்தான் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த மாதிரி படம் யாரும் நடிக்க மாட்டாங்க. அப்படியே பண்ணாக்கூட கதை யாரைப் பற்றியோ அவுங்களே அதில் நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த மாதிரி அமையாது. நான் ரொம்ப லக்கி என்னோட வாழ்க்கையே படமாக்கி அதுல நானே நடிச்சிருக்கேன். அதுக்காக எனக்கு 1985ல தேசிய விருது கிடைச்சது. இதைவிட பெருமை வேற எதுவுமே இல்ல என் வாழ்க்கைல.
டான்ஸ் ஸ்கூல் நடத்துறீங்களே? அதில் கிடைச்ச அனுபவம்?
மும்பையில டான்ஸ் ஸ்கூல் வெச்சிருக்கேன். டான்ஸ் ஸ்கூல்ல போய் உட்கார்ந்துட்டா மனசுக்கு ரொம்ப நிம்மதி கிடைக்கும்.ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு.
மும்பைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறீர்களே? சென்னையில் எப்போ வீடு வாங்க போறீங்க?
இந்தக் கேள்வி கொஞ்சம் லேட். போனமாதம் தான் சென்னையில் வீடு வாங்கினேன். இப்போ சூட்டிங்கிற்காக மாதத்தில் பதினைந்து, இருபது நாள் இங்கேதான் இருக்கிறேன். முன்பு மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். இப்போ சென்னையில் இருந்து மும்பைக்குப் போய் வருகிறேன்
.
உங்க குடும்பம் பற்றி?
எனக்குக் குழந்தைகள் இல்லை. என் கணவர் ரவியும் நானும் தான். அவர் சினிமா இன்டஸ்ட்ரியில் டைரக்ஷன் பீல்டுலதான் இருந்தாரு. அதுக்குப் பிறகு கனடா போய் சில வரும் ஓர்க் பண்ணிகிட்டு இருந்தாரு. இப்போது எங்கள் நாட்டியப்பள்ளியை அவர்தான் பார்துகிட்டு இருக்கிறார்.